அவிநாசி அருகே சோகம்: தெருநாய் கடித்து தொழிலாளி உயிரிழப்பு


திருப்பூர்: அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி தேவேந்திரர் நகரைச் சேர்ந்தவர் ல.அற்புதராஜ் (42). மரம் வெட்டும் தொழிலாளி. இவரை, கடந்த மாதம் தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் அற்புதராஜ் உடல்நிலை மோசமானது. அவரை, தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், நாய் கடிக்கு போதிய சிகிச்சையை அவர் பெறாததால் உடல்நிலை மோசமானது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அற்புதராஜ் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ”தெருநாய் கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய் கடித்தால், உடனடியாக மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றனர். உயிரிழந்த அற்புதராஜின் குடும்பத்தினருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

x