பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைப்பற்றப்பட்டு 38 ஆண்டுகளாக நீதிமன்ற பொறுப்பில் இருந்த ஒரு பவுன் தாலி மற்றும் பத்து ரூபாய் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகேயுள்ள போளிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கடந்த 1987ம் ஆண்டு குடும்பத் தகராறில் அவரது மனைவி அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை கொன்றுவிட்டு தலைமறை வானார். நெகமம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முத்துசாமி போலீஸாரிடம் சிக்கவில்லை. கொலையான அருக்காணி அணிந்திருந்த மஞ்சள் கயிறுடன் கூடிய ஒரு பவுன் தங்கத் தாலி மற்றும் அவர் வைத்திருந்த 10 ரூபாய் நோட்டு போலீஸாரால் பொள்ளாச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது. இவை நீதிமன்ற பாதுகாப்பில் இருந்து வந்தது.
முத்துசாமி கைது செய்யப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு இதுவரை நிலுவையிலேயே உள்ளது. இதற்கிடையே ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் பிரகாசம், நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள ஒரு பவுன் தங்கத் தாலி, 10 ரூபாயை சம்பந்தப்பட்டவரின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த சில வாரங்களாக அருக்காணி உறவினர்களை போலீஸார் தங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தேடி வந்தனர். இதில், வெள்ளாள பாளையத்தை சேர்ந்த முத்தம்மாள் (82) என்பவர் கொலையான அருக்காணியின் அக்காள் என தெரிய வந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து ஒரு பவுன் தங்கத் தாலியையும், 10 ரூபாயையும் ஒப்படைத்தனர்.
இது குறித்து முத்தம்மாள் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு முன் எனது தங்கை, அவரது குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர். தற்போது நீதிமன்றத்தில் இருந்து தங்கையின் தங்கத் தாலி மற்றும் பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறினார்கள். அதன்படி நகை, பணத்தை பெற்றுக் கொண்டேன்” என்றார்.