ஜல்லிக்கட்டில் காளை உரிமையாளர்களின் சாதி பெயரை அறிவிக்க கூடாது: கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்


கோவை: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை களம் இறக்கும்போது ஒலி பெருக்கியில் உரிமையாளர் பெயருடன் சாதி பெயர்களை தெரிவிக்ககூடாது என, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

கோவை செட்டிபாளையம், எல் அண்ட் டி புறவழிச்சாலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 27ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்திலிருந்து வாடிவாசல் வழியாக காளை ஓடும் பகுதி வரை மற்றும் காளை ஓடும் பகுதியிலிருந்து சேகரிப்பு மைதானம் வரை எட்டு அடிக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். சேகரிப்பு மையத்தில் வாயில்களுடன் கூடிய எட்டு அடி அடைப்பு மற்றும் காளையை கட்டி வைப்பதற்கு போதுமான எண்ணிக்கையிலான கம்புகள் அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறும் தினத்தில், 5 கி.மீ சுற்றளவில் அனைத்து கிணறுகளும் மூடப்பட வேண்டும். பங்கேற்கும் காளைகளுக்கு குடிநீர், தீவனம், தங்குமிடம் மற்றும் போதுமான ஓய்வு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

காளையின் உரிமையாளர் எப்போதும் காளையின் அருகிலேயே இருக்க வேண்டும். காளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்பு துறையினரால் முறையாக பரிசோதனை செய்யப்பட வேண்டும். மாடுபிடி வீரர்கள் உயிர்களை பாதுகாக்கும் பொருட்டு காளைகளின் கொம்பில் ரப்பர் உறைகள் அல்லது கூப்பிகளை பயன்படுத்தப்பட வேண்டும். உணவு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

வாடிவாசல் அரங்கில் பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வெப் கேமராக்கள் இருக்க வேண்டும். நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை விழாக் குழுவினர் கடைபிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வாடிவாசல் பகுதியிலிருந்து காளைகள் சேகரிக்கும் மையத்தை 60 முதல் 120 வினாடிகளுக்குள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

காளைகளை அவிழ்க்கும் போது ஒலி பெருக்கியில் காளையின் உரிமையாளர் பெயருடன் சாதி பெயர்களை தெரிவிக்கக்கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர்கள் தங்களது காளைகளின் விவரங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விதி மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு எல்லா வகையிலும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காளைகளை அடக்குவதற்கு ஒரு நேரத்தில் 25 பேர் மட்டுமே களத்தில் இருப்பதையும், ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டுமே காளை அடக்குவதையும் காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அமைப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x