ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


வில்லிபுத்தூர்: ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் வாயிாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில், விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதேபோல, அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில், ராஜேந்தி ரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி 2022 ஜனவரி 5-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கைது செயயப்பட்டார். தற்போது இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 2023 ஜனவரியில் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மேல் விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்காததால் வழக்கு நிலுவையில் இருந்துவந்தது.

இந்நிலையில், விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ரவீந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மற்றும் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆளுநருக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையில், ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரால், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2-ல் ராஜேந்திர பாலாஜி மீதான 2 வழக்குகளிலும் நேற்று ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

x