சென்னை: அதிமுக கொடி, ஜெயலலிதா பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த வி.கே.சசிகலா, துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த டிடிவி தினகரன் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் அடிப்படையில் கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், தினகரன் கடந்த 2018-ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அப்போது அதிமுகவின் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறகொடியில் ஜெயலலிதா படம் இருப்பதுபோல கட்சிக் கொடியைதினகரன் அறிமுகம் செய்தார். இதையடுத்து, அதிமுகவின் கொடி, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என தினகரனுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக கொடி போல அமமுக கொடியை வடிவமைத்ததற்காக ரூ. 25 லட்சம் இழப்பீடு கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பழனிசாமியும் சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்கேபி.தமிழரசி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி, தினகரனுக்கு எதிராக பழனிசாமி தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் டிடிவிதினகரனுக்கு எதிரான வழக்கை திடீரென வாபஸ் பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.