சென்னை: எந்தெந்த எப்ஐஆர்-களின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பிலும், தமிழக அரசு சார்பிலும் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர் தங்களது வாதத்தில் கூறியதாவது:
விசாரணையை தொடங்கிய உடனேயே அமலாக்கத் துறை அதிகாரிகள் நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதின் பின்னணி என்ன. சோதனைக்கு வந்த மார்ச் 6 அன்று டாஸ்மாக் தொடர்பான முதல் தகவல் அறிக்கையைத் தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை. சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தமிழக அரசு வழங்கியிருந்த ஒப்புதல் கடந்த 2023 ஜூன் மாதத்துடன் திரும்பப்பெறப்பட்டு வி்ட்டது. இந்தச் சூழலில் மாநில அரசின் அனுமதியின்றி மத்திய விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்ய முடியாது.
இந்த தொடர் சோதனை எந்த வழக்கின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்பது குறித்தும் அமலாக்கத் துறை தெரிவிக்கவி்ல்லை. டாஸ்மாக்குக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 42 வழக்குகளை லஞ்சஒழிப்புத் துறை போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் பதிவு செய்துள்ளனர். எனவே முதல் தகவல் அறிக்கை விவரம் தெரியாமல் வாதங்களை முன்வைப்பது என்பது இயலாத காரியம் என்பதால் எப்ஐஆர் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு துறையை குறிவைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்களது இஷ்டம்போல சோதனை நடத்தினால் அதனால் ஏற்படும் அபாயத்தை புரி்ந்து கொள்ள வேண்டும். அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அதுதொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். இவ்வாறு வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு மாநில அரசு உதவலாமே, என்றார். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘சட்டத்தை மீறி அமலாக்கத் துறை தங்களது இஷ்டம்போல இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும். சோதனை நடந்து கொண்டிருந்தபோதே டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மோசடி நடந்துள்ளதாக ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக அச்சு பிசகாமல் அமலாக்கத் துறையும் அறிக்கை வெளியிடுகிறது. இதற்கு என்ன அர்த்தம்’ என கேள்வி எழுப்பினார்.
அதையடுத்து நீதிபதிகள், எந்தெந்த எப்ஐஆர்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.