நெல்லை: திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடத்தில் பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் செல்வதற்கு ரயில் வசதி இல்லாததை கருத்தில்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக திருநெல்வேலி- மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக தொழில்நுட்ப காரணங்களுக்காக இந்த சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் மீண்டும் இயங்க தொடங்கியது.
வண்டி எண் 06030 திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13 முதல் ஜூன் 1 வரை ஞாயிற்றுக் கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06029 மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 14 முதல் ஜூன் 2 வரை திங்கள் கிழமைதோறும் மேட்டுப் பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடைய நல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக் கடவு, போத்தனூர், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 2 மாதங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தனது இயக்கத்தை தொடங்கிய திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலுக்கு பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு, ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கார்டு ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், ரயில் பயணிகள் சங்க செயலாளர் ஜெகன், துணைச் செயலாளர் தினேஷ், நிர்வாகிகள் சேர்ம ராஜா, காசி பாண்டியன், பிச்சையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயங்கி வரும் இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.