திருவாரூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து: தந்தை, மகன், மகள் உயிரிழப்பு


திருவாரூர்: நன்னிலம் அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக், அவரது 6 வயது மகன், 3 வயது மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (30). இவர், மயிலாடுதுறையில் கார் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டு பயன்பாட்டுக்கு மிளகாய் தூள் அரைப்பதற்காக, தனது மகன் நிரோஷன் (6), மகள் யாஷினி (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கோவில் திருமாளம் என்ற இடத்தில் உள்ள அரைவை மில்லுக்குச் சென்றார். அங்கு மிளகாய்த் தூள் அரைத்து விட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அகர திருமாளம் என்ற இடத்தில் சென்ற போது, எதிரே கரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மோகனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் லாரிக்கு அடியில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த பேரளம் போலீஸார், லாரியில் உள்ள ஜல்லிக் கற்களை பொக்லைன் மூலம் அகற்றி, லாரியை தூக்கி நிறுத்தி விட்டு, லாரிக்கு அடியில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x