சென்னை: சென்னையில் கடந்த 3-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.68,480-ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. பின்னர், தங்கம் விலை குறைந்தது. கடந்த 8-ம் தேதி ரூ.65,800-ஆக இருந்தது. பின்னர் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.68,480-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.8,560-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.74,704-க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.107 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரமாகவும் இருந்தது. சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்தது, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவற்றால் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எனவே, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறது. இதன் தாக்கத்தால் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்கிறது" என்றார்.