மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? - நீர்வளத் துறை செயலர் தகவல்


மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட நீர்வளத் துறைச் செயலர் மங்கத் ராம் சர்மா மற்றும் அதிகாரிகள்.

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீரை முதல்வர் திறந்து வைப்பார் என எதி்ர்பார்க்கப்படுகிறது, என என நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில், தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளையும், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார். மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் ஆய்வு செய்தார். அணைக்கு வரும் நீரின் அளவு, நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கூறியதாவது: வழக்கமான ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். மேட்டூர் அணை பராமரிப்பு பணி சிறப்பாக நடந்து வருகிறது. அணை நல்ல நிலையில் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி, முதல்வர் நேரில் வந்து மேட்டூர் அணையை திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்கூட்டியே பராமரிப்பு பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் கூடுதல் பணிகள் கேட்டுள்ள நிலையில், அந்தப் பணிகள் வழங்கப்படும். தற்போது, ரூ.20 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, 2 மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும். பாசன காலம் முடிந்த பிறகு பணிகள் தொடங்கப்படும், என்றார்.

ஆய்வின் போது, சேலம் மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x