தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இடம்பெற வாய்ப்பு இல்லை என்பதையே அக்கட்சியின் தேர்தல் நடைமுறை விதிகள் சொல்கின்றன.
பாஜகவின் தமிழக துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாஜகவின் அமைப்பு பருவ தேர்தல் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது
இந்த தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாளை (ஏப்.11) வெள்ளிக் கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாநில தலைவருக்கான தேர்தல்: மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்துப் பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்திக் குறிப்புதான் இப்போது தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், அக்கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.
ஆனால், தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் அண்ணாமலையும், அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து எம்.எல்.ஏவாக பதவி வகித்து வரும் நயினார் நாகேந்திரனும் இந்தக் கால அளவை எட்டவில்லை. எனவே, இருவரும் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.