மதுரை: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பா குருக்கள், சங்கர் குருக்கள் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “2021-ல் நடைபெற்ற திருநாகேசுவரம் கோயில் கும்பாபிஷேக விழாவுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பியதால், எங்களை இடமாற்றம் செய்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்து, முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: கோயில் கும்பாபிஷேக நன்கொடை தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் குற்றம் நடந்தது தெரியவந்துள்ளது. ரூ.80 லட்சம் வரை கோயில் நிதி கும்பாபிஷேகத்துக்காக எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, கும்பாபிஷேக நிதி முறைகேடு புகார் குறித்து சிபிசிஐடி விசாரித்து, புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி எஸ்.பி. சண்முகபிரியா, இந்த விசாரணையை கண்காணித்து, மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கும்பாபிஷே பணி எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறநிலையத் துறை ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் வேறு எந்தக்கோயிலிலும் இதுபோன்ற குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றம்உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். விசாரணை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.