‘தமிழுக்காக களம் பல கண்டவர்’ - யார் இந்த குமரி அனந்தன்?


சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழறிஞருமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழக அரசியலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் தேதியன்று பிறந்தவர்.

பெருந்தலைவர் காமராஜரின் சீடராக விளங்கியவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். 1977-ம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பலமுறை அவையில் போராடி, பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டு, சோர்ந்துவிடாமல் அவரின் தொடர் முயற்சியால் 20.11.1978 இல் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழிலேயே பேசியவர். இதுகுறித்து மறைந்த முதல்வர் கருணாநிதி, “தனிமரம் தோப்பாகாது” என்ற பழமொழியை மாற்றி அமைத்து விட்டார் என்ற பாராட்டினைப் பெற்றவர். குமரி அனந்தன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 15.08.1984 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர்.

இலக்கியச் செல்வராகவும், மேடைப் பேச்சாளராகவும் எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாக திகழ்ந்தவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர் குமரி அனந்தன்.

தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர். பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர்வர முனைந்து வென்றவர். வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும் சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்தவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள் என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும், தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர்.

நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன், பார் அதிரப் பாடிய பாரதி உட்பட 29 நூல்களை எழுதியவர். இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு 2024 சுதந்திர தின விழாவில் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

x