மதுரை: மதுரை - குருவாயூர் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கை 9-ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டு, முன்பதிவு பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் (56733/56736), செங்கோட்டை - கொல்லம் எக்ஸ்பிரஸ் (56337/56338), புனலூர் - குருவாயூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் (16327/16328) ஆகிய 3 ரயில்கள் இணைக்கப்பட்டு 2023 ஆகஸ்ட் மாதம் முதல் மதுரை - குருவாயூர் (16327/16328) ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 9, 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகள் 2, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது.
ஐ.சி.எப் நான் சிபிசி ரக பெட்டிகள் உடன் இயக்கப்பட்டு வந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் தற்போது மைய பஃபர் கப்ளர் (சிபிசி) தொழில் நுட்பத்தில் மறுசீரமைக்கப்பட்ட பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. சிபிசி தொழில்நுட்பத்தில் பெட்டிகளை தானியங்கி முறையில் இணைக்கும் வசதி, விபத்துகளின் போது பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்று ஏறுவதை தடுத்தல், தடம் புரள்வது மற்றும் விபத்தை தடுக்கும் அம்சம் மற்றும் 24 பெட்டிகளை இழுக்கும் தன்மை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் இடம் இல்லாமல் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்பதிவு பெட்டிகளை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கை 9-ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டு, முன்பதிவு பெட்டிகள் 2-ல் இருந்து 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துடன் வரும் 15-ம் தேதி முதல் மதுரை-குருவாயூர் ரயில் இயக்கப்பட உள்ளது.
மதுரை-செங்கோட்டை இடையே 14 முன்பதிவில்லாத பெட்டிகள் உடன் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டுள்ளதால், மதுரையில் இருந்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை செல்லும் பயணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டை-புனலூர் மலைப்பாதையில் 21 எல்.எச்.பி அல்லது 24 ஐ.சி.எப் பெட்டிகளுடன் ரயில்களை இயக்க ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் தேவைக் கேற்ப கூடுதல் பெட்டிகளை இணைக்காமல் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.