சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள்மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று (ஏப்.8) வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். தொடர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இவற்றின் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் (40-50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 9 (நாளை) முதல் 13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 10-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது. ஓரிரு பகுதிகளில் இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கக்கூடும் என்பதால், மக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, மதுரை மாவட்டம் எழுமலையில் 8 செ.மீ. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.