சென்னை பல்கலைக்கழகத்தில் மகளிர் விடுதி கட்டுவதை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தோழி மகளிர் விடுதி கட்டுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பயில்வதே பெருமையாகும். இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கி படிக்கின்றனர். இதற்கிடையே சேப்பாக்கம் வளாகத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிகள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால், மாணவிகளின் துயரை போக்கும் வகையில் புதிய விடுதி கட்டப்படவேண்டும் என உயர் கல்வித் துறைக்க்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் மாணவியர் விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு பதிலாக, ராமானுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் பின்புறத்தில் மாணவிகள் விடுதி அமைந்துள்ள இடத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தோழி விடுதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்திருப்பது மாணவியரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது மாணவிகளை பாதித்து விடக்கூடாது. தோழி விடுதிகளை கட்ட சென்னையில் ஏராளமான இடங்கள் இருக்கும் நிலையில், அவற்றை விடுத்து பல்கலைக்கழக மாணவிகள் தங்குமிடத்தை பறிப்பது நியாயமல்ல.

பல்கலைக்கழகங்களில் போதிய விடுதி வசதிகள் இல்லாவிட்டால் மாணவிகள் உயர்கல்வி கற்க முன்வர மாட்டார்கள். எனவே மாணவியரின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை கண்டிப்பாக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

x