திருச்சி: தமிழ்நாடு யாதவ மகாசபை திருச்சி மாவட்ட அலுவலகம், திருமண தகவல் மையம் திறப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கரூர் பிரதான சாலையில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு யாதவ மகாசபை திருச்சி மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வம் அலுவலகத்தை திறந்து வைத்தார். மற்றொரு மாநிலச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
இதில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது, கால்நடை மற்றும் ஆடு வளர்ப்போர்களுக்கு நல வாரியம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.