விருதுநகர்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விருதுநகரில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பெண்கள் எம்பிராய்டரிங்கில் ஒன்றான ‘ஆரி’ வேலை செய்யும் சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்திய ஆரி வேலை செய்யும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முதலாவது மாநாடு விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் அரவிந்த் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். சின்னத் திரை நட்சத்திரங்கள் அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, சுஜி சித்ரா உள்ளிட்டோர் பேசினர்.
அதைத் தொடர்ந்து சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 3 ஆயிரம் பெண்கள் 1.30 மணி நேரத்தில் ஆரி வேலை செய்து சாதனைபடைத்தனர். இச்சாதனையை பதிவு செய்து அதற்கான சான்றிதழை நோபிள் உலக சாதனை அமைப்பினர் வழங்கினர்.