நீலகிரி: எமரால்டு அணையில் தண்ணீர் குறைந்த நிலையில், போர்த்தியாடா, இத்தலார் பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், எமரால்டு அணையும் ஒன்று. இந்த அணையின் தண்ணீரை கொண்டு குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் ஆகிய நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நீர் எமரால்டில் இருந்து போர்த்தியாடா வரை சுமார் 10 கி.மீ. தூரம் பறந்து விரிந்து காணப்படும். மேலும், போர்த்தியாடா, இத்தலார் ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது மின் உற்பத்தி அதிகரிக்கும் சமயங்களில், இந்த அணையில் தண்ணீர் குறைந்து காணப்படும். காட்டுக்குப்பை மின் நிலையம், நீரேற்று மையங்கள் கட்டுமானப் பணிகள் நடப்பதால், இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்த அணையில் இருந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது, தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால், போர்த்தியாடா பகுதியிலும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும், சிறிய கால்வாயில் மட்டுமே தண்ணீர் செல்கிறது.
அணையில் தண்ணீர் இல்லாத நிலையில், மழையும் பெய்யாத நிலையில், இந்த அணையின் கரையோரங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை மழை பெய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகளுக்கு, விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.