கருமுட்டை குழாயில் வளர்ந்த கருவை அகற்றி பெண்ணை காப்பாற்றிய சிவகங்கை அரசு மருத்துவர்கள்


சிவகங்கை: அரசு மருத்துவமனையில் பெண்ணின் கருமுட்டைக் குழாயில் வளர்ந்த கருவை லேப்ராஸ்கோபி முறையில் அகற்றி அவரை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

காரைக்குடியைச் சேர்ந்த 35 வயது பெண் வயிற்று வலியுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகப்பேறு மற்றும் மகளிர் நல பிரிவு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு இரண்டு கரு உருவாகி, ஒன்று கர்ப்பப் பையிலும், மற்றொன்று கருமுட்டைக் குழாயிலும் வளர்ந்து கருமுட்டை குழாய் வெடிக்கும் நிலையில் இருந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் லேப்ராஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்றி காப்பாற்றினர். அதேபோல் காளையார்கோவில் அருகே சாக்கூரைச சேர்ந்த துரை ராஜ் மனைவி சரசு (75). ஏற்கெனவே அவருக்கு கர்ப்பப்பை அறுவைசிகிச்சை செய்தநிலையில், திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரி சோதனை செய்ததில் சினைப்பையில் 7.5 கிலோ கட்டி இருந்தது. அவருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அறுவைசிகிச்சை செய்து கட்டியை அகற்றினர்.

கர்ப்பப்பை நீர்ப்பை மற்றும் மலக்குடல் இறக்க பிரச்சினையுடன் திருப்பத்தூர் அருகே கருப்பூரைச் சேர்ந்த பாண்டி மனைவி சுமதி (43) என்பவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவைசிகிச்சை மூலம் கர்ப்பப்பையை மருத்துவர்கள் அகற்றினர்.

மருத்துவமனை டீன் சத்தியபாமா, மகப்பேறு மற்றும் மகளிர் நலப் பிரிவு துறைத் தலைவர் நாகசுதா,பேராசிரியர் தென்னரசி, மயக்கவியல் பிரிவு பேராசிரியர் வேல்முருகன், அறுவைசிகிச்சை பேராசிரியர் கங்கா, மனநலப் பிரிவு பேராசிரியர் ராஜசுந்தரி ஆகியோருக்கு நோயாளிகள், அவர்களது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

x