பணிச் சுமையால் நீதிமன்ற ஊழியர் தற்கொலை என குற்றச்சாட்டு: திருச்சியில் உறவினர்கள் போராட்டம்


திருச்சி: எடமலைப்பட்டி புதூர் ஜோசப் காலனியைச் சேர்ந்தவர் அருண் மாரி முத்து (36). இவர், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அருண் மாரிமுத்து பணிச் சுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அருண் மாரிமுத்து குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் விசாரணை நடத்தினார். அருண் மாரி முத்துவுக்கு சுகன்யா என்ற மனைவி, 3 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x