“பொறுத்தது போதுமென பொங்கி எழ வந்துள்ளேன்” - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செல்லூர் ராஜூ ஆவேசம்


மதுரை: ‘‘பொறுத்தது போதுமென பொங்கி எழ வந்துள்ளேன்’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாநகராட்சி கூட்டத்தில் கூறியதற்கு திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘சமீப நாட்களாக மாநகராட்சியை பற்றி வருகிற செய்திகளை பார்த்து பொறுத்தது போதுமடா, பொங்கி எழு என்ற மனோகரா திரைப்பட வசன அடிப்படையில் பேச வந்துள்ளேன். கொஞ்சம் நேரம் பேசலாமா?’’ என்றார். அதற்கு மேயர் இந்திராணி ”தாராளமாக பேசலாம், உங்கள் கருத்து மட்டுமில்லை, அனைத்து கவுன்சிலர்கள் கருத்துகளையும் உள்வாங்கி அதை நிறைவேற்றுவதற்குதான் மாநகராட்சி உள்ளது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, ‘‘உயர் நீதிமன்றமே கோயில் மாநகரமான மதுரை, குப்பை நகரமாக மாறியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளது’’ என்றார். அதற்கு திமுக கவுன்சிலர்கள், உயர்நீதிமன்றம் கூறிய இடம் மாநகராட்சிக்குட்பட்டது இல்லை என்று ஒருசேர பதிலளித்தனர். அதற்கு செல்லூர் கே.ராஜூ, முதலில் என்னை பேச விடுங்கள் என்றார். அதற்கு மேயர் இந்திராணி, தவறாக பேசக்கூடாது அல்லவா, என்றார். அதிமுக கவுன்சிலர்கள் எழுந்து, முன்னாள் அமைச்சர் பேசும்போது குறுக்கிடாதீர்கள் என்று பதில் கோஷமிட்டனர்.

தொடர்ந்து பேசிய செல்லூர் கே.ராஜூ, ‘‘ மதுரை சாலைகளில் செல்ல முடியவில்லை. இடுப்பு எலும்பு முறிந்துவிடும் போல் உள்ளது. சாலைகளில் குப்பை குவிந்து தொற்றுநோய் பரவுகிறது. நானே மாநகராட்சி அதிகாரிகளிடம் குறிப்பிட்ட இடங்களை சொல்லி சுட்டிக் காட்டினேன். ஒரு மாதத்துக்கு மேலாகியும் அகற்றப்படாமல் உள்ளது. அதைத்தான் உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது.

மேயரும், ஆணையரும் பெண்கள். கவுன்சிலர்களிலும் 50 சதவீதம் பெண்கள். அவையில் பெண்கள் நிறைந்து இருப்பது, பெருமையாக உள்ளது. மதுரையில் மீனாட்சிகூட 6 மாதம்தான் ஆட்சி செய்வார். ஆனால், மேயர் நீங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்கிறீர்கள். மதுரையை மேம்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களிடம் உள்ளது.

மதுரையில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கக்கூடிய பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் எப்போதுதான் நிறைவேறும். இப்போது வரும், அப்போது வரும் என்கிறார்கள். ஆனால் வரவில்லை. குடிநீர் பிரச்சனையை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும். மதுரையில் உள்ள அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான். அதுபோல், மதுரையில் இதுபோன்ற திட்டங்கள் உங்கள் ஆட்சியில் செய்தது என்று எதிர்காலத்தில் பெருமைப்படனும். மாநகராட்சி நிர்வாகம் ரொம்ப மெதுவாக நடக்கிறது’’ என்றார்.

செல்லூர் ராஜூ - மேயர் மாறி மாறி பதிலடி

செல்லூர் ராஜூ பேச்சுக்கு மேயர் இந்திராணி, ”உங்கள் தொகுதிக்குட்பட்ட ஒரு வார்டில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் சமுதாயக்கூடத்தை திறந்து வைத்துவிட்டு வெளியே வந்தபோது, உங்கள் கட்சியின் பகுதி செயலாளர் ஒருவர் எங்களிடம் வந்து, நாங்கள் 10 ஆண்டுகளில் செய்யாததை நீங்கள் செய்துள்ளீர்கள், என்று பாராட்டினார். அப்படி உங்கள் கட்சியினரும் பாராட்டும்படிதான் எங்கள் ஆட்சி நடக்கிறது. அந்த வீடியோவை தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். அதுபோல், ஒவ்வொரு முறையும் மேற்கு தொகுதிக்குள் நாங்கள் செல்லும்போதும், 10 ஆண்டுகளாக சாலை அமைக்கப் படவில்லை, உங்கள் ஆட்சியில்தான் சாலை அமைத்துள்ளீர்கள் என்கின்றனர்” என்றார்.

அதற்கு செல்லூர் ராஜூ “நான் அரசியல் செய்ய வரவில்லை. அப்படி நீங்கள் சொன்ன மாதிரி நான் மக்களுக்கு நல்லது செய்யாமல் இருந்திருந்தால், எப்படி மக்கள் 3 முறை தொடர்ந்து மேற்கு தொகுதியி்லிருந்து என்னை தேர்ந்தெடுத்து இருப்பார்கள்’’ என்று பேசியபடியே வேகமாக வெளியேறினார்.

x