புதுச்சேரி: ஆரோவில்லில் நடந்த மாரத்தானின் பார்வையற்றோர் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் அப்பகுதி களைகட்டியது.
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அமைதிக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெறும். இவ்வாண்டிற்கான ஓட்டம் இன்று நடைபெற்றது. சென்னை, பெங்களூரு, மும்பை, ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆரோவில்லில் வசிக்கும் வெளிநாட்டவரும் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உலக அமைதி, மனித ஒற்றுமை, உடல் வலிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற 42 கி.மீ. மாரத்தானில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு ஆர்வத்துடன் ஓடினர். இதனை ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு அதிகாரி சீத்தாராமன் துவக்கி வைத்தார். ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சோர்வடையாமல் ஓட்டம் முடிந்த அரங்கில் நடனமாடினார்கள். தமிழ் பாடல்களுக்கு அரங்கில் பெரிய அதிர்வலை ஏற்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகம் குறையாமல் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
மக்கள் ஒற்றுமை உடல் வலிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தை பாதுகாப்பாக நடத்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவி, ஆரோவில் ஆய்வாளர் கமலஹாசன் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
மேலும் மாரத்தானில் பங்கேற்கும் நபர்கள் உற்சாகத்துடன் பங்கேற்க வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் ஆங்காங்கே இசை இசைத்து பயனாளிகளுக்கு உற்சாகம் அளித்தனர். ஆரோவில் தரப்பில் கூறுகையில், முழு மாரத்தானில் 103 பேரும், அரை மாரத்தானில் 999 பேரும், பத்து கிலோமீட்டர் ஓட்டத்தில் பத்து பார்வையற்றோர் உட்பட 1521 பேரும் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் இரு திருநங்கைகளும் போட்டியில் பங்கேற்றனர். ஆரோவில் விசிட்டர் சென்டரில் தொடங்கி கால்பந்து திடலில் முடிவுற்றது." என்றனர்.