கோவை: அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்காக மார்ச் மாதம் நடைபெற உள்ள குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்பவர்கள் தங்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்று பணப்பலன்கள் இதுவரை கிடைக்கப்பெறாமல் இருந்தால் பணியாற்றிய அரசு துறை, எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு ஒய்வூதிய குறை தீர்ப்பு மாதிரிப் படிவத்தில் பூர்த்தி செய்து இரட்டை பிரதிகளில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.
பெயர் மற்றும் முகவரி. பி.பி.ஓ.எண். ஓய்வு பெற்ற நாள். கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை. குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்). முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம். இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம். குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் மார்ச் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறும். இந்த நேர்முகக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.' இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.