சென்னையில் மிக கனமழை - மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம்


சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது. இதனால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்

வங்கக்கடலில் நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை வேளச்சேரி, விஜயநகர் இரண்டாவது மெயின்ரோடு சந்திப்பில் பலத்த காற்று காரணமாக மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த சக்திவேல் என்பவர் மீது மின்கம்பி பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

அதேபோல பிராட்வே பகுதியில் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்ற வட மாநில வாலிபர் சந்தன் என்பவர் மின்சாரம் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இசைவாணன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னையில் மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x