சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழமையான சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 1957 முதல் 1967-ம் ஆண்டுகளுக்குள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் என 4 சிலைகள் திருடப்பட்டன. இந்த சிலைகள், கடத்தல் கும்பலால் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் 2020-ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த சிலைகள் வெளிநாட்டில் வெவ்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் ஆக்ஸ் போர்டு பல்கலை.யின், அஸ்மோலியன் அருங்காட்சியகத்தால், 1967-ல் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் திருடப்பட்ட சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள உண்மையான சிலைகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஈடுபட்டனர். அதன்படி, அறிவியல்பூர்வமான ஆதாரங்களைத் தொகுத்து, 4 சிலைகளையும் கும்பகோணம் சவுந்திரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதில்,லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர், தமிழகம் வந்து, சிலை தொடர்பான உண்மை தன்மையை ஆராய்ந்தார். அப்போது, புலன் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி.சந்திரசேகரன் சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று, அச்சிலை தமிழகத்தை சேர்ந்ததுதான் என, ஆக்ஸ்போர்டு பல்கலை. பிரதிநிதி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை. ஒப்புக்கொண்டது. விரைவில் அச்சிலை தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு, சம்பந்தப்பட்ட கும்பகோணம் சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பழையபடி வைக்கப்பட உள்ளது. மேலும், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக திருமங்கை ஆழ்வார் சிலையை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்.