ஈரோட்டில் கடந்த இரண்டு நாட்களாக மாயமானதாக தேடப்பட்டு வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வந்தவர் முரளி (26). இவருக்கு திருமணமாகி மனைவி வித்யஸ்ரீ மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்த முரளி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதனிடையே ஈரோடு ரயில்வே குடியிருப்பு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் பார்த்தபோது கழுத்தில் குத்து ஏற்பட்டு மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அது மாயமான முரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், முரளி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அவரது உடலைப் பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுத்த காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.