இரண்டு ஆண்டுகளாக பழகி விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரின் அந்தரங்க உறுப்பை காதலி அறுத்து எடுத்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. சரண் மாவட்டத்தில் உள்ள மரஹவுராவைச் சேர்ந்தவர் பூரணி பஜாரின் மகன் விகாஷ் சிங். இவர் தான் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விகாஷ் சிங்கும், ஒரு இளம்பெண்ணும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விகாஷ் சிங்கை அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக அந்த இளம்பெண் காத்திருந்தார். ஆனால், விகாஷ் சிங் அங்கு செல்லவில்லை. இதனால் அந்த இளம்பெண் ஆத்திரமடைந்தார்.
இதுதொடர்பாக அந்த பெண்ணுக்கும், விகாஷ் சிங்கிற்கும் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது திடீரென விகாஷ் சிங்கின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அந்த பெண் வெட்டியு எடுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விகாஷ் சிங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாப்ராவில் உள்ள சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மர்ஹவுரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு வருடங்களாக பழகி விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் விகாஷ் சிங்கின் அந்தரங்க உறுப்பை வெட்டியதாக அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த நிலையில் விகாஷ் சிங்கின் நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் பாட்னாவில் உள்ள சிருஷ்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.