அண்ணியின் தங்கையை காதலித்து திருமணம் செய்ய விரும்பிய வாலிபர், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவரின் மூத்த சகோதரரின் மனைவியின் தங்கையை சந்தோஷ் காதலித்து வந்தார். அத்துடன் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், அவரது காதலை அப்பெண் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த சந்தோஷ், வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், நான் ஒரு பைத்தியக்கார காதலன் என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற வாசகத்துடன் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முட்கல் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் சந்தோஷ் தற்கொலை குறித்து வேறு காரணங்கள் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.