டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை. அரசின் மதுபானம் சாப்ட் டிரிங்க் போல அவர்களுக்கு தெரிவதால் கள்ளச்சாராயம் நாடி செல்கிறார்கள் என தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குற்றத்துக்காக பயன்படுத்தப்படும் அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசியபோது, நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன், “கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள். உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை. அரசின் மதுபானம் சாப்ட் டிரிங்க் போல அவர்களுக்கு தெரிவதால் கள்ளச்சாராயம் நாடி செல்கிறார்கள்.
கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு, போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகக்கூடிய அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேண்டாமா. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அதேபோல அமைச்சர் முத்துசாமி பேசும்போது, "தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர முடியுமா என்பதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூரண மதுவிலக்கு கொண்டுவருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், தற்போது அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம்.
படிப்படியாக மதுக்கடைகளை குறைத்தும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என அவர் விளக்கமளித்திருந்தார்.