காங்கிரஸ் மூத்த தலைவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ், தெலுங்கானாவில் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
பிரிக்கப்படாத ஆந்திராவின் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்த தருமபுரி ஸ்ரீனிவாஸ், சோனியா காந்தி உள்பட உயர் காங்கிரஸ் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். 76 வயதான ஸ்ரீனிவாஸ், சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் தெலங்கானாவில் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தற்போது நிஜாமாபாத் எம்.பி.யாக உள்ளார். ஸ்ரீனிவாஸின் மூத்த மகன் சஞ்சய், நிஜாமாபாத் மேயராகப் பணியாற்றியவர்.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்எல்ஏவாகவும், 2009-ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி அமைச்சராக ஸ்ரீனிவாஸ் பதவி வகித்துள்ளார். அத்துடன் 2016-முதல் 2022 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்தார்.
கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுத்த தலைவர்களில் இவரும் ஒருவர். அவரின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு தெலங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் இரங்கல் தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி (கிராமப்புற நீர் வழங்கல் உட்பட), பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தன்சாரி அனசுயா சீதக்காவும் ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.