ஆசிரியையை மிரட்டி வாலிபர் நடுரோட்டில் திருமணம் செய்ய முயற்சி... வெளியான அதிர்ச்சி வீடியோ!


கட்டாய திருமணம் செய்ய முயன்ற வாலிபர்

வேலை முடிந்து தந்தையுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை நடுரோட்டில் வாலிபர் ஒருவர் கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மணமகளுக்கு தாலி கட்டுவதன் மூலம் திருமண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வடமாநிலங்களில் சில இடங்களில் பெண்ணின் நெற்றில் குங்குமம் இடுவது திருமணமாக கருதப்படுகிறது. அப்படி பெண்ணைக் கட்டாயப்படுத்தி வாலிபர், திருமணம் செய்ய முயன்ற சம்பவம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் தொகுதியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில், பள்ளியில் வேலை முடிந்து தனது தந்தையுடன் பைக்கில் ஆசிரியை வருகிறார். அப்போது ​​​​இரண்டு இளைஞர்கள் அவரை சாலையில் நிறுத்துகிறார்கள். அதில், முகத்தை துணியால் மறைத்த வாலிபர் ஒருவர், வலுக்கட்டாயமாக ஆசிரியையின் நெற்றியில் குங்குமத்தை பூச முயல்கிறார். அவரிடமிருந்து தனது மகளைக் காப்பாற்ற ஆசிரியையின் தந்தை முயற்சி செய்கிறார். அந்த ஆசிரியையும் சேலையால் தனது நெற்றியை மறைக்கிறார். ஆனால், அதை மீறி ஆசிரியைக்கு வாலிபர் குங்குமம் பூசுகிறார். இதை மற்றொரு இளைஞர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, அந்த இளைஞன் மீது ஆசிரியை போலீஸில் புகார் அளித்தார். அதில், "பாபங்காமாவைச் சேர்ந்த சவுரப் சோனு என்ற இளைஞர் தொலைபேசியில் தனிப்பட்ட முறையில் என்னைத் துன்புறுத்துகிறார். அமர்பூரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிய தொடங்கியதில் இருந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்.

அவர் மீது இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், இதனால் போலீஸார் அவரை அழைத்து எச்சரித்த போதிலும், அவர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக புகாரில் கூறியுள்ளார். இப்புகார் குறித்து போலீஸார் விசாணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x