கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்த்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் சிலருக்கு அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதில் முதல் நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது இறுதிச் சடங்குக்கு வந்தவர்கள், கள்ளச்சாராயம் அருந்தியதால் அவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும் பலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். உடல்நலன் தேறிய 70க்கும் மேற்பட்டோர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது 7 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.