டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி சுற்று போட்டி கயானா நாட்டில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில், தாமதமாக போட்டி துவங்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி 9 ரன்களிலும், ரிஷப் பண்ட் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆனால் பொறுப்புணர்ந்து விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்களும், சூரியகுமார் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த பிறவீரர்கள் கணிசமான பங்களிப்பை வழங்கியதால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கிரிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 25 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆர்ச்சர் மட்டும் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பிற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 16.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சார் பட்டேல் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 2007ம் ஆண்டு முதல் முறையாக டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி கோப்பையை வென்றிருந்தது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.