நைஜீரியா நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 22 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், கென்யா நாட்டு பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் விமானங்களில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்னைக்கு வருகை தந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். விமானத்தில் பயணம் செய்த கென்யா நாட்டைச் சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர், நைஜீரியாவிலிருந்து தோகா வழியாக சுற்றுலா விசாவில் இந்தியா வந்தது தெரிய வந்தது. அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது அவர் அணிந்திருந்த ஷூக்களை கழற்றி சோதனை செய்து பார்த்த போது, ஷூவின் அடிபாகங்களில் ரகசிய அறை வைத்து அதற்குள் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த 5 ஜோடி ஷூக்களிலும் இதே போன்று ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு போதைப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அது என்ன வகையான போதைப்பொருள் என்பதை கண்டறிவதற்காக சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் அது விலை உயர்ந்த கொக்கைன் போதைப் பொருள் என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 2.2 கிலோ எடையிலான இந்த கொக்கைன் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு 22 கோடி என சுகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கென்யா நாட்டுப் பெண்ணை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.