ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மீனவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி பெற்று விசைப்படகு ஒன்றில் 8 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களுடன் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்ற மீனவரும் உடன் சென்றிருந்தார். நேற்று நள்ளிரவில் நடுக்கடலில் இவர்கள் அனைவரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென செல்வராஜ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் அவரை உடனடியாக ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் போலீஸார், செல்வராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்த செல்வராஜின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.