அதிக கனமழை காரணமாக மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜூன் 28-ம் தேதி வரை பயணம் செல்வதைத் தவிர்த்திடுமாறு தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் இறுதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உருவான புயல் வலுப்பெற்றுதன் காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது .
இந்நிலையில் கனமழை இன்று வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்து இருந்தது. அதன்படி கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையும், இடுக்கி மற்றும் தென் மாவட்டங்களைத் தவிர எர்ணாகுளம் முதல் வயநாடு வரையிலான 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் இன்று விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேரளா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு, நாதாபுரம், குட்டியாடி போன்ற மலைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மணிக்கு 40 கி.மீ. வேகத்திற்கும் மேல் காற்று வீசியதில் தாமரச்சேரி பகுதியில் மண் சரிவும் ஏற்பட்டது.
இந்த சூழலில் எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், மூணாறு, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் ஜூன் 28-ம் தேதி வரை மூணாறு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.