சொத்து தகராறில் முதல் மனைவியை வெட்டிக் கொலை செய்ததாக அவரது கணவர், இரண்டாவது மனைவியின் மகன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா தாலுகாவில் ள்ள சொன்னேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரெட்டி(60). இவருக்கு பத்தம்மா(50) என்ற மனைவி இருந்தார். இந்த நிலையில்,திடீரென முனிரெட்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் முதல் மனைவி பத்தம்மாவிற்கும், முனிரெட்டிற்கும் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பத்தம்மாவிற்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இறந்ததால், சொத்தை தனக்குத் தான் வழங்க வேண்டும் என்று பத்தம்மா கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை முனிரெட்டிக்கும், அவரது முதல் மனைவி பத்தம்மாவுக்கும் சொத்துப் பிரச்சினை சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. குழந்தை இல்லாத உனக்குச் சொத்து தரமாட்டேன் என்று முனிரெட்டி கூறியுள்ளார். அப்போது முனிரெட்டியும், அவரது இரண்டாவது மனைவியின் மகன் கிரீஷ் ஆகியோர் சேர்ந்து பத்தம்மாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பத்தம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலை குறித்த தகவல் அறிந்த சிட்லகட்டா புறநகர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பத்தம்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பத்தம்மாவை சொத்துப் பிரச்சினையில் கொடூரமாக கொலை செய்த கணவர் முனிரெட்டி மற்றும் அவரது இரண்டாவது மனைவியின் மகன் கிரீஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.