வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல்... சுரேஷை களமிறக்கிய காங்கிரஸ்!


கொடிக்குன்னில் சுரேஷ், ஓம் பிர்லா

துணை சபாநாயகர் பதவியை மரபுப்படி எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுத்து விட்டதால், சபாநாயகர் வேட்பாளராக இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்களவை வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நிலையில், 1951ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் சபாநாயகராக ஜி.வி.மவளங்கர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது வரை 17 பேர் மக்களவை சபாநாயகர்களாக பதவி வகித்துள்ளனர். 2009ம் ஆண்டு மீரா குமார் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றிருந்தார்.

மக்களவை சபாநாயகர் பதவி

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டிருந்தார். 18வது மக்களவை தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களவை சபாநாயகராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டுமென காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வருகிறது. துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை குறி வைத்திருப்பதால் பாஜக அதனை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க தயக்கம் காட்டி வருகிறது.

இந்தியா கூட்டணி கட்சி எம்பி-க்கள்

இதனால் சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவை பாஜக பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் மரபுப்படி துணை சபாநாயகர் பதவி வழங்கப்படாததால், காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அவை முன்னவரான 8 முறை எம்பி-யாக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷை சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் வரலாற்றில் முதன்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

x