நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமையாக்கப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது.
கடந்த 22-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், மூன்று விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் அனைவரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளது. இதைக் கண்டித்து கடந்த 24-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் நேற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்று இருந்தனர். இவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துள்ளனர். பின்னர் படகை பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.