பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தலில், கூடுதல் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக முதல் நிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி, நிலம் கையகப்படுத்தலுக்கான கணக்கீடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதிய விமான நிலையத்துக்கான பணிகள் மற்றும் நிலம் கையகப்படுத்தலால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அங்கத்திய கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டப் பணிகளுக்கான 5,746 ஏக்கர் நிலத்தில், அரசு நிலம் 1,972 ஏக்கர் மற்றும் தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர் கையகப்படுத்தப்பட இருக்கின்றன. தனியார் நிலத்தை பெறுவதற்காக ரூ1,822 கோடி இழப்பீடு வழங்க கணக்கிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விரைவில் விமான நிலையத்துக்கான பணிகள் தொடங்கவிருப்பதை அடுத்து, புதிய நிலம் கையகப்படுத்தல் தொடர்பான அறிவிப்புகளையும் தமிழ்நாடு தொழில், முதலீட்டு மற்றும் வர்த்தக துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
தற்போது வெளியாகி உள்ள முதல் நிலை அறிவிப்பின்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் புதிய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. முன்னதாக அப்பகுதியில் உள்ள சிறுவள்ளூர், பொடாவூர், அக்கமாபுரம் ஆகிய ஊர்களின் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியானதன் வரிசையில், எடையார்பாக்கத்துக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
eடையார்பாக்கம் நிலம் எடுப்பு தொடர்பாக ’நிலம் குறித்த பாத்தியதை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம்’ என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய நிலம் எடுப்பு உட்பட, மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை காஞ்சிபுரம் மாவட்டம், காரை கிராமத்தில் அமைந்துள்ள புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டத்துக்கான தனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு உரிய முறையில் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...