சாலையில் கழன்று ஓடிய காரின் டயர்... மரண பயத்தில் புலம்பிய காவல் ஆய்வாளர்!


நடுரோட்டில் கழன்று ஓடிய கார் டயர்

தாம்பரத்தில் பெண் காவல் ஆய்வாளர் சென்ற வாகனத்தின் டயர் கயன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடவுள் புண்ணியத்தில் உயிர் தப்பித்ததாக புலம்பும் ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயலட்சுமி. இவர் வழக்கம் போல் நேற்று இரவு பணியை முடித்து விட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசு(டாட்டா சுமோ) வாகனத்தில் மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு சென்று உள்ளார். காரை அவரது ஓட்டுநர் காவலர் பாண்டியன் ஓட்டிச் சென்றுள்ளார்.

நடுரோட்டில் கிடக்கும் கார் டயர்

அப்போது ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரின் பின்புறம் உள்ள டயர் திடீரென கழன்று ஓடி உள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறிது தூரம் சென்று நின்றுள்ளது. இதில் கார் ஓட்டுநர் மற்றும் காவல் ஆய்வாளருக்கு எந்த ஒரு காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து காரில் இருந்து இறங்கி இருவரும் விபத்துக்குள்ளான காரை வீடியோவாக பதிவு செய்தனர். அப்போது, கடவுள் புண்ணியத்தில் தப்பித்து உள்ளோம் என காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

காவல்துறையில் கொடுக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களை அரசு பழுது பார்த்து சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் சக காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

x