கும்பகோணத்தில் முந்தி சென்று பயணிகளை ஏற்றியதால் ஏற்பட்ட தகராறில், பயணிகளுடன் சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி மினி பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகர பேருந்து நிலையத்திலிருந்து பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை கும்பகோணம் நால்ரோடு, சிஆர்சி டெப்போ, பாலக்கரை, அரசு மருத்துவமனை, மகாமக குளம் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று கும்பகோணம் நகர பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் புறப்பட்ட மற்றொரு மினி பேருந்து ஏற்கெனவே சென்ற மினி பேருந்து முந்தி சென்று அரசு மருத்துவமனை முன்பு பயணிகளை ஏற்றியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முதலில் சென்ற மினி பேருந்து ஓட்டுநர், பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு தனக்கு முன்னால் முந்தி சென்று பயணிகளை ஏற்றிய மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இரு பிரிவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், வாகன ஓட்டிகள் சத்தம்போட்டதை தொடர்ந்து மினி பேருந்தை எடுத்துச் சென்றனர். இதனால் அங்க சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!
மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!