கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடியின் நிலை குறித்து கலாய்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சி படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
400 தொகுதிகளில் சொல்லிவைத்து ஜெயிப்போம் என்று முழங்கிவந்த பாஜகவுக்கு தேர்தல் முடிவில் 240 தொகுதிகள்தான் தேறியது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. அதேநேரத்தில் துடைத்து வீசப்படும் என சொல்லப்பட்ட இந்தியா கூட்டணி, பாஜகவின் இலக்கை கிட்டத்திட்ட துரத்திவந்து பயம் காட்டியது.
ஒரு கட்டத்தில், ‘50 தொகுதிகளில் கூட ஜெயிக்க மாட்டார்கள், எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது’ என்றெல்லாம் பிரதமர் மோடியால் கிண்டலடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்று அசத்தியுள்ளது.
தனிப்பெரும்பான்மை என்ற 272 இலக்கை எட்ட முடியாததால், இப்போது சந்திரபாபு நாயுடுவின் 16 எம்.பிக்களும், நிதிஷ்குமாரின் 12 எம்.பிக்களுமே ‘மோடியின் சர்க்காருக்கு’ அச்சாணியாகியிருக்கிறார்கள். எனவே இவர்கள், பிரதமர் பதவியைத் தவிர மக்களவை சபாநாயகர் தொடங்கி, நிதித்துறை, உள்துறை, வேளாண் துறை, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் என எல்லா துறைகளையும் சகட்டு மேனிக்கு கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.
இதுமட்டுமின்றி ஒருகாலத்தில் பம்பிக்கொண்டிருந்த ஏக்நாத் ஷிண்டே, சிராக் பஸ்வான் கூட பாஜகவுக்கு இப்போது நிபந்தனை போட ஆரம்பித்துள்ளார். இரண்டே சீட் வைத்துள்ள கர்நாடகா குமாரசாமி கூட பாஜகவிடம் கேபினட் அமைச்சர் கேட்டு நெருக்கி வருகிறார். ஒரு சீட் வைத்துள்ளவர்களும் கோரிக்கைகளோடு நிற்பதாக சொல்லப்படுகிறது.
2014, 2019 என முழு மெஜாரிட்டியோடு எல்லோரையும் விழிபிதுங்க வைத்தே பழக்கப்பட்ட பிரதமர் மோடியை, இப்போது கூட்டணி கட்சிகள் விழிபிதுங்க வைக்கின்றன என இந்தியா கூட்டணிக் கட்சிகள் கேலி செய்துவருகின்றன. இந்த சூழலில் இன்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடியை ஒருபக்கம் நிதிஷ் குமாரும், மறுபக்கம் சந்திரபாபு நாயுடுவும் இழுக்கும் படத்தை வெளியிட்டுள்ளது. இது இணைத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...