மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நிதித்துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தங்கள் வசமே வைத்துக் கொள்வது என்றும், அவற்றை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க இயலாது என்றும் பாஜக உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதங்களை வழங்கின.
இச்சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திராபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு முக்கிய இலாகாக்களை கேட்டுப் பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.
குறிப்பாக சபாநாயகர் பதவியை பெறுவதில் இரு கட்சிகளுமே தீவிரம் காட்டி வருவதாகவும், சந்திரபாபு நாயுடு நிதித் துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இதேபோல், நிதிஷ்குமாரும் சில இலாகாக்களை குறிப்பிட்டு கேட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சூழலில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் பாஜக உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே துறை மற்றும் சபாநாயகர் போன்ற முக்கிய துறைகள், பதவியை தங்கள் வசமே வைத்துக் கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாகவும், கூட்டணி கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களுக்கு வேறு இலாகாக்களை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.