ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்... ஒன்றிணைய ஓபிஎஸ் விடுத்த அறிக்கை!


ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரும் தோல்வியடைந்தனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

வி.கே சசிகலா

இந்த நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதிமுக அழிவரை இனியும் வேடிக்கைப் பார்க்க முடியாது என்று கோபத்துடன் அவர் அறிக்கை விட்டிருந்தார்.

இந்த நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

அதில்; “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியமாகும்.

'தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே' என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

x