மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முயன்று வரும் நிலையில், சபாநாயகர், கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும், தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ்குமார் ஆகியோரது ஆதரவு முக்கிய தேவையாக உள்ளது. 'பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உறுதியாக இருக்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை' என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ள என்டிஏ கூட்டணி கூட்டத்தில் சபாநாயகர் பதவிக்கான தனது கோரிக்கை மற்றும் பிற கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு முன்வைப்பார் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் சந்திரபாபு நாயுடுவிடம் பேசவில்லை. என்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சந்திரபாபு நாயுடு, பிற்பகல் 1 மணியளவில் டெல்லி வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றொரு நம்பிக்கையாக உள்ள பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாரும் டெல்லிக்கு விரைந்துள்ளார்.
இச்சூழலில் பாஜகவின் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் மக்களவை சபாநாயகர் பதவி மற்றும் கேபினட் அமைச்சர்கள் பதவியை தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என பாஜக தலைமையிடம் டிமாண்ட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவு கடிதங்களை வழங்கும். அதன் பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.