தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்கள் பலர் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்தன. அத்துடன் இந்தியா கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்று அந்த கருத்துக் கணிப்புகளில் சொல்லப்பட்டது.
இதனால் வாக்கு எண்ணிக்கை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கருத்துக் கணிப்பு முடிவுகளை காலி செய்யும் வகையில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை அமோக வெற்றி பெற்ற பாஜக, தற்போது கூட்டணி கட்சிகளின் தயவு இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு தொகுதிகளில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
ஒட்டு மொத்தமாக 40 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.
இந்த தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலர் போட்டியிட்டனர். விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா களம் இறங்கினார். அவருக்கு ஆதரவாக நடிகரும், அவரது கணவருமான சரத்குமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் ராதிகா தோல்வியடைந்தார்.
கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார்.
விழுப்புரம் (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக திரைப்பட இயக்குநர் களஞ்சியம் போட்டியிட்டார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரிடம் தோல்வி அடைந்தார். வேலூர் தொகுதியில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால், அவர் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.