தமிழ்நாட்டில் இருந்து மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 5 பெண் எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட 40 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 1 லட்சத்து 66 ஆயிரத்து 8 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . இவரை எதிர்த்து அதிமுக தரப்பில் போட்டியிட்ட தங்கவேல் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 1 லட்சத்து 96 ஆயிரத்து 199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரிடம் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வியடைந்துள்ளார்.
இதேபோல் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சுதா 2 லட்சத்து 71 ஆயிரத்து 183 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் . இவர் அதிமுகவின் பாபுவை தோல்வியடைய செய்துள்ளார் .
தென் சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2 லட்சத்து 25 ஆயிரத்து 945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனை வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தமிழகத்தின் 5 எம்.பிக்கள் மக்களவையில் இடம் பெற்றுள்ளனர்.