மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதாவை விட அகில அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி வேட்பாளர் அசதுத்தீன் ஒவைசி 2,12,341 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கு மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் இருந்து எண்ணப்பட்டு வருகிறது. இதில் தலா 8 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் முன்னிலை வகிக்கின்றன.
இதன்படி அடிலாபாத், நிஜாமபாத், கரீம்நகர், மேடக், செகந்திராபாத், மல்காஜ்கிரி, செவெல்லா மற்றும் மகபூப் நகர் மக்களவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வக்கின்றனர். பெத்தபள்ளே (எஸ்சி), மஹபூபாபாத் (எஸ்டி), வாரங்கல் (எஸ்சி), போங்கிர், கம்மம், நல்கொண்டா, நாகர்கர்னூல் (எஸ்சி) மற்றும் ஜஹீராபாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. இதனால் அக்கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அக்கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
ஹைதராபாத் தொகுதியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய போது, பாஜக வேட்பாளர் மாதவி லதா முன்னிலை பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அகில அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசி பின் தங்கினார். ஆனால், தற்போது 2,12,341 வாக்குகள் வித்தியாசத்தில் ஒவைசி முன்னிலை வகிக்கிறார். கடந்த நான்கு மக்களவைத் தேர்தல்களில் இந்த தொகுதியில் ஒவைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்